நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பித்துள்ள, ஆசிரியர்களின் தகுதிகளை ஆராய்ந்து, இறுதி பட்டியல் தயாரித்து பரிந்துரைக்க, மாவட்ட அளவிலான சிறப்பு குழு, இன்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், செப்டம்பர் 5 ம் தேதி, ஆசிரியர் தின விழாவின் போது, சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்க, நல்லாசிரியர் விருது வழங்குவது வழக்கம். இந்த விருதுக்கு தேர்வு செய்யும் ஆசிரியர்கள், நேரம் தவறாமை, கற்பிக்கும் முறை, பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம்,நன்னடத்தை, பணித்திறன் என, பல்வேறு விஷயங்களில், மதிப்பீடு பெற்றிருப்பவராக இருத்தல் அவசியம்.
இதுதவிர, பணி அனுபவம் உள்ளிட்ட, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, தகுதியுள்ளோர் பட்டியல்,மாவட்ட கல்விக்குழு சார்பில் பரிந்துரைக்க வேண்டும். இதில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், கடந்தாண்டு, தேர்வு குழு உறுப்பினருக்கே, நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டதாக,புகார் எழுந்தது.
இதுசார்ந்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலசங்கம் சார்பில், கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில் விருதுக்கு விண்ணப்பிக்க, இன்று (ஆக., 9) வரை,கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில்:
கோவை கல்வி மாவட்டத்தில், தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளிகளில் இருந்து, 46 பேர் விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், தகுதியுள்ள, 24 பேர் மட்டுமே, பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்படுவர்.
இதுசார்ந்த ஆய்வுக்கூட்டம், முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று நடக்கிறது. இதில், தேர்வுக்குழு உறுப்பினர்களால், தகுதியுள்ளோரை அடையாளம் காணும் பணிகள் நடக்கும், என்றார்.
No comments:
Post a Comment