Thursday, July 17, 2014

கவுன்சலிங் குழப்பத்திற்கு தீர்வு: நீதி கேட்டு ஐகோர்ட் படியேறிய ஆசிரியைக்கு இடமாறுதல்

மதுரையை சேர்ந்த ஆசிரியை சங்கீதா ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். 24.7.2012ல் மதுரையில் நடந்த ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் என்னை திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிடப்பட் டது. இந்த உத்தரவு நகல் சிவகங்கை மாவட்ட முதன் மை கல்வி அதிகாரிக்கு (சிஇஓ) கிடைக்காததால் என்னை அங்கிருந்து விடுவிக்கவில்லை. அதனால், வேறொருவரை அந்த பணியிடத்துக்கு மாற்றிவிட்டனர்.

என்னை கவுன்சலிங் உத்தரவுப்படி திருப்பா லை பள்ளிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி நாகமுத்து நேற்று முன்தினம் விசாரித்தார். அப்போது, வக்கீல்கள் போராட்டம் காரணமாக ஆசிரியை சங்கீதாவே நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் நேற்று நீதிபதி முன் முதன்மை கல்வி அதிகாரி ஆஜராகி, ஆசிரியை சங்கீதாவை திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவு நகலை நீதிபதியிடம் அளித்தார். இதையடுத்து மனு மீதான விசாரணையை நீதிபதி முடித்து வைத்தார்.
தரம் உயர்த்தப்படும் அரசுபள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங் நடக்குமா?
தரம் உயர்த்தப்படும் அரசுபள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங் நடக்குமா? 
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் அரசு உயர்,மேல்நிலைப்பள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங் அறிவிப்பு,சட்டசபையில் வெளியாகுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 
தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் தரம் உயர்வுக்கு தகுதியான அரசு பள்ளிகள் குறித்த
பட்டியலை சேகரித்த கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. உயர்,
மேல்நிலை கல்வியை பொறுத்தவரை இரு பிரிவிலும் தலா 100 பள்ளிகள் என, தரம் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று (ஜூலை17)
சட்டசபை கல்வித்துறை குறித்த மானியக் கோரிக்கையின்போது வெளியாகலாம் என, எதிர்பார்ப்பதாக கல்வித்துறை யினர், ஆசிரியர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதன்படி, உயர்,மேல்நிலை கல்வியில் 200 பள்ளிகளை தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டால், உயர் நிலை வகுப்பில் 500 புதிய இடங்களும், மேல்நிலையில் 900 காலி பணியிடமும் உருவாகும். இவ்விடங்களை நிரப்ப மீண்டும்கவுன்சிலிங் நடத்தினால் உள், வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரிய பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என,ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், " ஏற்கனவே முடிந்த மாறுதல் கவுன்சிலிங்கில் சாதகமான சில இடங்களை மறைத்து, சிபாரிசுகளுக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சட்ட சபை கல்வித்துறை மானியக் கோரிக்கையில் தரம் உயர்த்தி அறிவிக்கப்படும் பள்ளிகளுக்குமான காலியிடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்தினால் அரசியல், பணம் பலமற்று, ஒரே பள்ளியில் பத்தாண்டுக்கு மேல் பணிபுரியும்வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்," என்றார்

Wednesday, July 16, 2014

மாணவர்கள் இல்லாததால் மூடுவிழா கண்ட அரசுப்பள்ளி

மாணவர்களே இல்லாததால் தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியம் தென்பழனியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை கடந்த ஆண்டு வரை 10க்கும் குறைவான மாணவர்களே பயின்று வந்தனர். ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் பணியில் இருந்தனர். இக்கிராமத்தில் குடியிருப்புகள் குறைவாகவே உள்ளன. கடந்த ஆண்டில் படித்த மாணவர்களும் வெளியூர் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டிபட்டி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சம்பூர்ணபிரியா கூறியதாவது: மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டும் முடியவில்லை. இதனால் உதவி ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இப்பகுதி பொதுமக்களுடன் கலந்து பேசி, பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து படிக்க விரும்பும் பட்சத்தில் பள்ளியை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
இடமாறுதல் 'கவுன்சிலிங்'கில் முறைகேடு: ஆசிரியை கண்ணீர்; கல்வி அலுவலர் ஆஜர்: ஐகோர்ட் உத்தரவு

ஆசிரியர் இடமாறுதல் 'கவுன்சிலிங்'கில் முறைகேடு நடந்ததாக தாக்கலான வழக்கில், ஆசிரியை மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜராகி கண்ணீர் சிந்தினார். மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் ஆஜராகி விளக்கமளித்தார். அவர் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை பீ.பீ.குளம் சங்கீதா தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் இடமாறுதல் 'கவுன்சிலிங்' மூலம், மதுரை திருப்பாலை அரசு உயர்நிலை பள்ளிக்கு இடமாறுதல் செய்து, 2012 ஜூலை 24 ல் உத்தரவிடப்பட்டது. ஆனால், 2012 ஆக.,22 வரை அப்பள்ளியில் நான் பணியில் சேரவில்லை எனக்கூறி, ஆசிரியை கிரிஜாவை அங்கு கல்வித்துறை அதிகாரிகள் இடமாறுதல் செய்தனர். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சென்றேன். அங்கு, 'உங்களுக்கான இடமாறுதல் உத்தரவு சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். உத்தரவு கிடைத்த பின், திருப்பாலை பள்ளிக்குச் செல்லலாம்,' என்றனர். தகவல் உரிமைச் சட்டம் மூலம் விபரம் கோரியபோது, சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலருக்கு, மதுரையிலிருந்து கடிதம் அனுப்பவில்லை, என உறுதியானது. பலமுறை மதுரை முதன்மைக் கல்வி அலுவலரை சந்திக்க முயன்றேன். அவரது நேர்முக உதவியாளரிடம் பேசிய போது,' உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்,' என்றார். இப்பேச்சுக்களை, மொபைல் போனில் பதிவு செய்துள்ளேன். 'கவுன்சிலிங்' முடிவை அதிகாரிகள் மதிக்கவில்லை; நிறைவேற்றவில்லை. தினமும் 4 மணி நேரம் பயணம் செய்து, புழுதிப்பட்டி பள்ளிக்குச் சென்று வருகிறேன். எனது தாய் உடல் ஊனமுற்றவர். குழந்தையை கவனிக்க வேண்டியுள்ளது. ஆஸ்துமா பிரச்னை உள்ளது. 'கவுன்சிலிங்'கில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருப்பாலை பள்ளிக்கு இடமாறுதல் செய்து, பணியாற்ற அனுமதிக்க உத்தர விட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், நேற்று காலை 11:00 மணிக்கு மனு விசாரணைக்கு வந்தது. வக்கீல்களின் கோர்ட் புறக்கணிப்பால், மனுதாரரே ஆஜராகி கண்ணீர் மல்க பிரச்னைகளை தெரிவித்தார். நீதிபதி: பெண்கள் அழக்கூடாது. கண்ணகி நீதிகேட்டு போராடியதுபோல், போராட வேண்டும். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகல் 12:00 மணிக்கு ஆஜராக வேண்டும், என்றார். மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆஜராகி விளக்கமளித்தார். நீதிபதி: மனுதாரர் இடமாறுதல் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, முதன்மைக் கல்வி அலுவலர் இன்று (ஜூலை 16) விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றார்.
ஆசிரியர்கள் கட்டாய மாறுதல்: வழக்கு தொடர முடிவு

தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க பொதுக் குழு கூட்டம் விழுப்புரம் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் நடந்தது.

மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மரியபிரகாசம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சம்பத், சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.

தமிழகத்திலுள்ள 4, 587 ஆசிரியர் பயிற்றுனர்களையும் ஒட்டு மொத்தமாக கட்டாய மாறுதல் செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்வது, கடந்த ஜன.,1ம் தேதி முதல் மார்ச் மாதம் வரை அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

லோக்சபா தேர்தலில் மண்டல அலுவலர்களாக பணிபுரிந்தவர்களுக்கு ஊதியத் தொகை வழங்க வலியுறுத்தி இன்று (15ம் தேதி) மாவட்டத் தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கவுன்சலிங்கில் உத்தரவு வழங்கியும் பயனில்லை
இடமாறுதல் பெற்ற பள்ளியில் வேறொரு ஆசிரியர் நியமனம்

மதுரை, பீ.பீ.குளம், சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் சங்கீதா. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு:சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக (கணிதம்) 2008ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன். வயதான தாய், நோய் தாக்கமுள்ள குழந்தை ஆகியோரை உடன் இருந்து கவனிக்க வேண்டி இருந்தது. இதனால் மதுரை, திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிதாக துவக்கப்பட்ட பட்டதாரி கணித ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றம் செய்ய கோரினேன்.

இதன்படி 24.7.2012ல் மதுரையில் நடந்த ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் என்னை திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு நகல் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு (சிஇஓ) கிடைக்காததால் என்னை அங்கிருந்து விடுவிக்கவில்லை. ஆனால் 22.8.2012 வரை மாறுதல் செய்யப்பட்ட திருப்பாலை பள்ளியில் நான் பணியில் சேரவில்லை எனக்கூறி அந்த இடத்திற்கு திருச்சி மாவட்டத்திலிருந்து கிரிஜா என்பவரை மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

கவுன்சலிங் உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை. தினசரி 4 மணிநேரம் பயணிப்பதில் சிரமம் உள்ளது. எனவே என்னை கவுன்சலிங் உத்தரவுப்படி திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடப்பதால் மனுதாரரின் வக்கீல் ஆஜராகவில்லை. இதனால் ஆசிரியை சங்கீதா நீதிபதி முன் ஆஜராகி வாதாடினார். சிஇஓ நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட் டார். இதைத் தொடர்ந்து சிஇஓ ஆஞ்சலோ இருதயசாமி நீதிபதி முன் ஆஜராகி விளக்கமளித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் குறிப்பிடும் புகார் உண்மையென தெரியவந்தால் நீதிமன்றம் கடும் நடவடிக்கையை எடுக்கும். லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய நிலை வரும். இந்த ஆசிரியைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது, தற்போதைய நிலை, மனுமீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ஆகியவை குறித்து மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நாளை (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராகி முழு அறிக்கையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பெண்கள் அழக்கூடாது
வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகிய ஆசிரியை சங்கீதா, நீதிபதி முன் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது பேசிய நீதிபதி, நீதிக்காக போராடிய கண்ணகி மதுரையை எரித்தார். எனவே பெண்கள் எதற்கும் அழக்கூடாது. போராட வேண்டும். அதுவும் ஆசிரியையாக இருப்பவர் அழக்கூடாது என்றார்.
மாநகராட்சிப் பள்ளிகளில் 100% தேர்ச்சி இலக்கு: மேயர்

மாநகராட்சி பள்ளியில் கல்வி பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் 100 ஆங்கில ஆசிரியர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் டெக் மகிந்திரா அமைப்பு ஆகியவை இணைந்து ஆங்கில பயிற்சியை வழங்கின. இந்தப் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியும், புதிய 150 ஆசிரியர்களை பயிற்சியில் சேர்க்கும் நிகழ்ச்சியும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி பேசியது: தனியார் பள்ளிகளில் கல்வித்தரம் அதிகம் என்ற நினைப்பு உள்ளது. இதேபோல, அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால் தகுதி குறைவு என்ற எண்ணமும் உள்ளது.

மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 3 பேர் முழுத் தகுதிகளுடன் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். வரும் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சியடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தமிழை மறந்துவிடக்கூடாது. தாய்மொழி சிந்தனைதான் அறிவுடைமையை காட்டும். தாய்மொழி சிந்தனை தாய்ப்பால் போன்றது. எளிமையானது. அதனால் ஆங்கிலத்துக்கு மட்டும் அக்கறை காட்டாமல், தாய்மொழி சிந்தனைக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்றார் மேயர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், துணை மேயர் பா. பென்ஜமின், துணை ஆணையர் (கல்வி) லலிதா, டெக் மகிந்திரா அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி லவ்லீன் காக்கர், கேம்பிரிட்ஜ் ஆங்கில பயிற்சி பிரிவின் இயக்குநர் ஏஞ்சலா ஃபிரெஞ்ச் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
BRTE: ஆசிரிய பயிற்றுநர்களின் பணிமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுமா?

தமிழகத்தில் வட்டார வளமையத்தின் ஆசிரிய பயிற்றுநர்களை பணிமாறுதல்செய்ய வேண்டுமென்ற அரசின் கட்டாய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென பயிற்றுநர்கள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். 
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்திடவும், அரசின் திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு செல்வதோடு அதை தொடர்ந்து கண்காணிக்கவும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்கள்தோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஒரு வட்டார வளமையம் உருவாக்கப்பட்டது.

அதில் வட்டார வளமைய மேற்பார்வையாளரின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களின் நிலையிலானஆசிரிய பயிற்றுநர்கள் பணியாற்றினர். அரசு தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இவர்கள் செயல்வழிக்கற்றல், எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி, படைப்பாற்றல் கல்வி போன்ற கற்பிக்கும் முறைகளை கொண்டு சேர்ப்பது, ஒவ்வொரு பள்ளியிலும் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்வது, பள்ளியில் உள்ள வசதிகள், தேவையானவை குறித்தும் உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தல்போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசால் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களும் இவர்கள் மூலம் அந்தந்த வட்டார ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

கடந்த 2001-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் சுமார் 8 ஆயிரம் ஆசிரிய பயிற்றுநர்கள் பணிபுரிந்தனர். பயிற்றுநர்களும் பட்டதாரிஆசிரியர்கள் நிலையிலானவர்கள் என்பதால் இவர்களில் ஆண்டுக்கு 500 பேர் வீதம் பணி மூப்பு அடிப்படையில் தனியாக கலந்தாய்வுநடத்தி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியர்களாக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு காலிப்பணியிடத்துக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு பள்ளிக்கு மாறுதலானவர்கள் போக தற்போது தமிழகமெங்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 135, திருச்சி 165, அரியலூர் 107, சிவகங்கை 136, மதுரை 147, தஞ்சாவூர் 158 என மொத்தம் 4,587 பேர் பயிற்றுநர்களாகஉள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக்கு மாற்றப்படாமல் அதே வட்டார வளமையத்திலேயே பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் ஆசிரிய பயிற்றுநர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென ஜூன் 9-ம் தேதி மாநில கல்வித் துறைச் செயலர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த மாதம் கடைசி வாரத்தில் இடமாறுதலுக்கான உத்தரவை பெற்ற பயிற்றுநர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இது குறித்து பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆசிரிய பயிற்றுநர்கள் கூறியது: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தந்த வருடமும் தமிழகத்தில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் 500 பேர் தேர்வு செய்து தனியாக கலந்தாய்வு நடத்தி பள்ளிக்கு மாற்றம் செய்தனர். இதன்மூலம் அவரவர் விருப்பத்துக்கு பள்ளியை தேர்வு செய்தனர். கடந்த 3 ஆண்டுகளாக எங்களை பள்ளிக்கு மாற்றம் செய்யவில்லை.

இதுகுறித்து அரசிடம் வலியுறுத்தியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எங்களை வேறு வட்டார வளமையத்துக்கு கட்டாயப்படுத்தி மாற்றியுள்ளது அரசின் விதிமீறலாம். அலுவலராக இருப்பவர்கள் 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் மாற்றம் செய்யலாமென்ற விதியை ஆசிரியர்களாகிய எங்கள் மீது திணித்திருப்பது தவறானது. இந்த நடவடிக்கை அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வட்டார வளமைய பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்ட 13 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத செயலாகும். தற்போது தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள்கூடஅவரவர் விருப்பத்துக்கு கலந்தாய்வு மூலம் வீட்டின் அருகேயுள்ள ஒரு பள்ளியை தேர்வு செய்யும் நிலையில் இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்த எங்களை திடீரென பணியிடமாற்றம் செய்யவேண்டுமென்ற கல்வித் துறை செயலரின் உத்தரவை தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Saturday, July 12, 2014

கல்வித்துறை 'கவுன்சிலிங்'கால் ஆசிரியர்கள் அதிருப்தியா?விசாரணையை துவக்கியது உளவுத்துறைகல்வித்துறை 'கவுன்சிலிங்'கால் ஆசிரியர்கள் அதிருப்தியா?விசாரணையை துவக்கியது உளவுத்துறை

தமிழக கல்வித் துறையில் நடந்து முடிந்த 'கவுன்சிலிங்' காலியிடங்கள் மறைப்பு, அரசியல் குறுக்கீடு போன்றவற்றால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,' என்ற தகவலால், மாவட்டம் தோறும் உளவுத் துறை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஜூன் 17 முதல் ஜூலை 2 வரையும், ஜூன் 16 முதல் 30 வரை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்தாண்டு 'ஆன்லைன்' மூலம் 'கவுன்சிலிங்' நடந்தது.இதில் பல பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

குறிப்பாக, 'முதல் நாளில் மாவட்டத்திற்குள் நடந்த 'கவுன்சிலிங்'கில் காண்பிக்கப்பட்ட காலியிடங்கள், மறுநாள் மாவட்டங்களுக்கு இடையே நடந்த மாறுதலில் காண்பிக்கப்படவில்லை' என்றும், உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதல் நாளில் 'சர்பிளஸ்' மாறுதலில் காட்டப்பட்ட கூடுதல் பணியிடங்கள், மறுநாளில் மாவட்டங்களுக்கு இடையே நடந்த மாறுதலில் காண்பிக்கப்படவில்லை. இதனால், பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இரவில் நடந்த கவுன்சிலிங்: 'கடந்தாண்டு, காலை 10 மணிக்கு 'கவுன்சிலிங்' துவங்கியது. ஆனால், இந்தாண்டு பெரும்பாலும் மதியம் 1 மணிக்கு மேல் தான் அனைத்து நாட்களிலும் துவங்கியது. குறிப்பாக, இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான பணிமாறுதல் மாலை துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடந்தது. அதேபோல், மாவட்டங்களுக்கு இடையேயான பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலும் இரவு முழுவதும் நடந்தன.

இதுகுறித்து விசாரித்தாலே பல விஷயங்கள் வெளியே வரும்,' என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். டி.இ.ஓ.,க்கள் மாற்றம் விவகாரம்: இதுதவிர, கல்வித் துறையை 'கலங்கடித்த' பல விஷயங்கள் குறித்தும் உளவுத்துறை போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். குறிப்பாக, மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் 'லிஸ்ட்' பணி மூப்பு அடிப்படையில் வெளிப்படையான அறிவிப்பு வெளியாகும். ஆனால் இந்தாண்டு, பதவி உயர்வோ, பணியிட மாற்றமோ ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தனித்தனியான உத்தரவுகள் வழங்கப்பட்டு 'ரகசியம்' காக்கப்பட்டது.

மேலும், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தொலைதுார மாவட்டங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் மாற்றப்பட்டு, பின் ஒருசில வாரங்களில் மீண்டும் அவர்கள் ஏன் மாற்றப்பட்டனர் என்றும், அவர்களின் பெயர் விவரங்களும் தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தாண்டு நடந்த ஆசிரியர் 'கவுன்சிலிங்'கில் அதிக எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிரியர்கள் அதிருப்தி குறித்து சங்கங்கள் சார்பில் அரசு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் அரசியல் குறுக்கீடு மற்றும் பேரம் ஏதும் நடந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது," என்றார்.

காத்திருக்கு 60 உத்தரவுகள்!பள்ளிக் கல்வியில் கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர் உட்பட நுாற்றுக்கணக்கான அமைச்சுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, கண்காணிப்பாளர் மாறுதல் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுக்கான 60 பேருக்கான உத்தரவுகள் தயாரிக்கப்பட்டு, இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால், ஏதோ காரணத்திற்காக அந்த 60 பேரின் உத்தரவுகளும் காத்திருக்கின்றன, என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, July 9, 2014

மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் விடுப்பில் கைவைப்பு

அரசு பள்ளி வேலை நாட்களில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு "ஆன் டியூட்டி" இன்றி தற்செயல் விடுப்பு நாளாக கணக்கிடப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் (சர்ப்ளஸ்) கலந்தாய்வு ஜூன் 16 முதல் ஜூலை 2ந்தேதி வரை நடந்தது. வேலை நாட்களில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு நாளாக கருதி தலைமை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அரசே வேலை நாள் என தெரிந்தே கலந்தாய்வு தேதியை நிர்ணயித்தது. கலந்தாய்வில் பங்கேற்ற நாளை பிற பணியாக (ஆன் டியூட்டி) கணக்கிட வேண்டும். ஆனால் தற்செயல் விடுப்பு நாளாக அறிவித்துள்ளனர்.

சொந்த அலுவலுக்காக எடுக்கும் விடுப்பு மட்டுமே தற்செயல் விடுப்பாகும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இது குறித்து வலியுறுத்தியபோது, தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்படும் என நம்பிக்கை அளித்தனர்.

மாவட்ட கல்வித்துறை அலுவலர்களிடம் இருந்து உத்தரவு எதுமில்லை என தலைமை ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இந்த நியாயமற்ற செயலால் 2 அல்லது 3 நாள் வரை பல ஆசிரியர்கள் பாதிக்கின்றனர்" என்றார்.

Wednesday, July 2, 2014

தேர்வு கட்டணத்தில் முறைகேடு
கல்வித்துறை அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்

கடலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன்(45). கடந்த 2012-13ம் ஆண்டிற்கு தேர்வுத்துறை கட்டணமாக ரூ.15 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈ-பார்ம் (மின்னணு பதிவு) மூலம் மாவட்ட கல்வி அதிகாரி மல்லிகா கையெழுத்திட்டது போன்று தேர்வு கட்டணத்தில் முறைகேடு செய்து சந்திரசேகரன் சென்னை பள்ளி கல்வித்துறைக்கு கணக்கு அணுப்பியுள்ளார். இதற்கிடையே கடலூர் மாவட்ட கருவூலத்துறை தங்கள் கணக்கிற்கு வந்து சேரவேண்டிய கல்வித்துறையின் பணத்தொகை குறைந்துள்ளது குறித்து சென்னை பள்ளி கல்வித்துறைக்கு விளக்கம் கேட்டது.

இது தொடர்பாக கோப்புகளை சென்னை பள்ளிக் கல்வித்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அலுவலர் சந்திரசேகரன், போலியாக மாவட்ட கல்வி அதிகாரி மல்லிகா கையெழுத்திட்ட கணக்கை சமர்ப்பித்து தேர்வு கட்டணம் ரூ.15 லட்சம் முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கையின் பேரில் கடலூர் கல்வி அலுவலக உதவி பிரிவு அலுவலர் சந்திரசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மரணமடைந்து 22 ஆண்டுக்கு பிறகு வந்த பதவி உயர்வு: போராடி பெற்றார் மனைவி

அரசு ஊழியருக்கு ஓய்வுபெற்று 25 ஆண்டுகளுக்கு பின்னர் பதவி உயர்வு கிடைத்துள்ளது. மரணமடைந்து 22 ஆண்டாகிய நிலையில் அவரது மனைவி அதற்கான உத்தரவை போராடி பெற்றுள்ளார். மார்த்தாண்டம் அருகே பம்மத்தை சேர்ந்தவர் ரசலையன். இவர் மேல்புறம் யூனியன் அலுவலகத்தில் 1978-1980 ஆணையாளராக பணி புரிந்தார். ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 1983ல் பதவியிறக்கம் செய்யப்பட்டு விரிவாக்க அலுவலராக 3 ஆண்டுகள் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, குருந்தன்கோடு யூனியனில் பணியாற்றியபோது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 1983ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 1984ல் சஸ்பெண்ட் விலக்கி கொள்ளப்பட்டு சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் 3 ஆண்டு பதவியிறக்க தண்டனை மற்றும் சஸ்பெண்ட் ஆகியவை என 5 ஆண்டாக அதிகரித்து போனது. பதவியிறக்க தண்டனை நிறைவு பெற்ற பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலராக முன்சிறை யூனியன் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். 1989ல் ரசலையன் பணி ஓய்வு பெற்றார். பின்னர் 1992ம் ஆண்டு ரசலையன் மரணமடைந்துவிட்டார்.

இதனிடையே, தன்னுடைய பதவியிறக்க ஆணையை செய்ய வேண்டும் என்று கோரி 1988ல் தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ரசலையன் மறைவுக்கு பிறகு இவ்வழக்கை அவரது மனைவி சரோஜம் தொடர்ந்து நடத்தி வந்தார். தீர்ப்பாயம் 2002ல் ரசலையனுக்கு வழங்கப்பட்ட பதவியிறக்க தண்டனையை ரத்து செய்தது. மேலும் அவர் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றியதாக தீர்ப்பு வழங்கியது. ஆனால் அரசு தரப்பில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
தீர்ப்பாய உத்தரவை அரசு அமல்படுத்தக்கோரி ஐகோர்ட்டில், 2002ல் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டும் தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்த உத்தரவிட்டது. ஆனால், அரசு தரப்பில் பதவி உயர்வு வழங்கவில்லை. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் பதவி உயர்வுகளை முன்தேதியிட்டு 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்று 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அரசுக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கடந்த மே மாதம் 27ம் தேதி தமிழக ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பிரஜேந்திர நவ்நீத் குமரி மாவட்ட கலெக்டருக்கு பிறப்பித்த உத்தரவில் ‘பணியில் ரசலையன் பெற்ற பதவி உயர்வான கோட்ட வளர்ச்சி அலுவலர் (தற்போது ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர்) பதவி உயர்வை அளித்துள்ளது. இதுதொடர்பாக ஊதிய நிர்ணயம் செய்து உரிய கருத்துரு பணிபதிவேட்டுடன் அனுப்ப வேண்டும்‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1983ல் கிடைத்திருக்க வேண்டிய பதவி உயர்வு மரணமடைந்து 22 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.