Saturday, June 14, 2014

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வயது தளர்வாணை வழங்கக் கோரிக்கை

தமிழ்நாடு ஊட்டச் சத்துத்துறையில் அங்கன்வாடிப் பணியாளர்களாக உள்ளவர்கள் கிராம சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு பெறும்போது அவர்களுக்கு வயது தளர்வாணை வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புக்கூட்டம் சி.இளஞ்சியம் தலைமையில் புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

கூட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன், துணைத் தலைவர் கே.நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, அவர்களை கிராம சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்குவது கடந்த 1990-களிலிருந்து நடைமுறையாக உள்ளது. இத்தகைய பதவி உயர்வு பெற அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் பணி முடித்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தகைய ஊழியர்கள் அரசால் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒன்னரை வருடம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஒன்னரை வருடத்தில் 6 மாதத்திற்கு ஒருமுறை மூன்று செமஸ்டர்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே கிராம சுகாதார செவிலியர் பணி வழங்கப்படும்.

இத்தகைய பயிற்சி முடித்தவுடன் கிராம சுகாதார செவிலியர்களாக பணியமர்த்தப்படுவதில்லை. பயிற்சி முடித்தாலும் தொடர்ந்து அவர்கள் அங்கன்வாடி பணியாளர்களாகவே நான்கு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை வேலை செய்ய செய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். பிறகுதான், சீனியாரிட்டி அடிப்படையில் பணியமர்த்தப் படுகிறார்கள். இப்படி காலம் கடந்து பணியமர்தப்படும் போது அவர்களில் பலருக்கு 40 வயதைக் கடந்து விடுகிறது. இதனால், இதர ஊழியர்களைப் போல அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, ஒப்படைப்பு சம்பளம், போனஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட பயன்கள் எதுவும் கிடைப்பதில்லை. எனவே, 40 வயதுக்கு மேல் கிராம சுகாதார செவிலியர்களாக பணியில் சேர்பவர்களுக்கு வயது தளர்வாணை வழங்க வேண்டும்.

அங்கன்வாடியிலிருந்து கிராம சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு பெறும் பொது, அங்கன்வாடி மையத்தின் பணிக்காலத்தில் 50 சதத்தை ஓய்வூதியத்திற்கு பயன்பெறும் வகையில் கணக்கில் கொள்ள வேண்டும். இதர ஊழியர்களைப் போல கிராம சுகாதார செவிலியர்களுக்கும் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் பொது பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment