தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதியைக் கண்டித்து, வரும், 10ம் தேதி முதல், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக, தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் ராஜசேகரன் வெளியிட்ட அறிக்கை:
சூலுார் ஒன்றியத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, ஊக்கத்தொகை நிலுவைப்பணம் தரவில்லை. இதைக் கேட்க, பள்ளி நேரம் முடிந்த பின், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தை, ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணாமல், தமிழக ஆசிரியர் கூட்டணி, சூலுார் வட்டார தலைவர் விஜயலட்சுமி, செயலர் ஹென்றி விக்டர் ஆகிய இருவரையும், பணியிடை நீக்கம் செய்து, டி.இ.ஓ., காந்திமதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், வினாத்தாள் அச்சடிக்க, மாணவர்களிடம் பணம் வசூல் செய்ய கட்டாயப்படுத்துவது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதைக் கண்டித்து, கடந்த 18ம் தேதி, டவுன்ஹால், டி.இ.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, வரும், 10ம் தேதி முதல், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட, ஐந்து சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment